மாலைமலர் 4-2-2003
சிவகங்கை, பிப்.4 - எலிக்கறி சாப்பிடும் கிராம மக்களுக்கு
மதுரையைச் சேர்ந்த முன்னாள் குற்றவாளி ஒருவர் சிறையில் அவர் எழுதிய கவிதை
நூல் மூலம் கிடைத்த தொகையில் இலவசமாக அரிசி, பணம் மற்றும் சாப்பாடு
வழங்கினார்.
எலிக்கறி கிராமம்
சிவகங்கை
மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் வேம்பத்தூரை அடுத்துள்ளது அழகாபுரி கிராமம்.
'இங்கு வசிக்கும் மக்கள் எலிக்கறி சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள். இது
பற்றிச் செய்தி வெளியானதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எலிக்கறி சாப்பிடும் கிராமத்தினருக்கு மதுரை
அண்ணாநகரைச் சேர்ந்த முன்னாள் குற்றவாளியான பி.ஆர். ரமேஷ் இலவசமாக அரிசி
மற்றும் பணம் வழங்கினார். பி.ஆர். ரமேஷ் 3 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.
இவரை போலீசார் 3 தடவை குண்டர்தடை சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும்
இவர் 7 வருடம் மதுரை மத்திய சிறையில் இருந்துள்ளார்.
இவர் ஜெயிலில் இருக்கும்போது மனம் திருந்தி கவிதைகள்
எழுதியுள்ளார். இவர் தன்னுடைய அனைத்து கவிதைகளையும் "பாலைவனத்தில்
நெற்கதிர்கள்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
இலவச அரிசி
இந்தப் புத்தகத்தை விற்பனை செய்ததின் மூலம் கிடைத்தப்
பணத்தைப் பயனுள்ள வகையில் செலவிட நினைத்தார். இந்த நிலையில் அழகாபுரி
மக்களின் நிலை பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்ட பி.ஆர். ரமேஷ் தன்னுடைய
வைகை மீனாட்சி ரிசர்வ் பவுண்டேசன் மூலம் இலவசமாக அரிசி வழங்க முடிவு
செய்தார்.
இதன்படி அவர் ஒரு லாரியில் அரிசி மூட்டைகளையும் ஒரு
வேளைக்கு சாப்பாடு பொட்டலத்தையும் தயார் செய்து எடுத்து வந்தார். லாரி
செல்ல பாதை இல்லாததால் அவருடன் வந்த நண்பர்கள் அரிசி மூட்டைகளைத் தலையில்
சுமந்து வயல் பாதை வழியாக வந்தனர். பின்னர் அந்த அரிசியை ஒரு
குடும்பத்திற்குத் தலா 25 கிலோ அரிசி என்ற விகிதத்தில் கொடுத்தனர். மேலும்
அவர்களுக்குக் காய்கறி வாங்க ரூ.50 உதவித் தொகையும் சாப்பாடு பொட்டலமும்
வழங்கினார். |